திங்கள், 28 அக்டோபர், 2019

கலிபோர்னியா காட்டுத்தீ : 50 ஆயிரம் பேர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றம்




மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளின் வடக்கில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 ஏக்கர் அளவிலான நிலங்கள் காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. மேலும், மலைப் பகுதிகளைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் காட்டுத் தீயால் சேதம் அடைந்துள்ளன. பலமாக காற்று வீசி வருவதால், காட்டுத் தீ வேகமாக பரவுகிறது. இந்நிலையில், மலைப் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் கரும்புகையால் மூடப்பட்டுள்ளன.

தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்களும், மீட்புப்படையினரும் போராடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள், ஏர் டேங்கர்கள் முயற்சியோடு தீயை அணைத்து வருகின்றனர்.

காட்டுத்தீ  என்றால் என்ன?

காட்டுத்தீ என்பது, எரியக்கூடிய தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும் . இதன் பாரிய அளவு; தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம்; எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; சாலைகள், ஆறுகள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறு படுத்துகின்றன  தீப்பிடித்தலுக்கான காரணம், பரவும் வேகம் போன்ற அதன் இயற்பியல் தன்மைகள், அங்குள்ள எரியக்கூடிய பொருட்கள், எரிதலில் தட்பவெப்பநிலைகளின் தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் காட்டுத்தீயின் தன்மைகள் வரையறுக்கப்படுகின்றன.

அன்டார்ட்டிக்கா தவிர்ந்த, உலகின் எல்லாக் கண்டங்களிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. காலத்துக்குக் காலம் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. புதைபடிவங்களும், உலக வரலாறும் காட்டுத்தீ பற்றிய பல தகவல்களைத் தருகின்றன காட்டுத்தீ பாரிய உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்த வல்லது. எனினும், சில தாவரங்கள் காட்டுத்தீயால் நன்மையடைவதும் தெரிய வருகிறது. சில இனத்தாவரங்கள், அவற்றின் வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்துக்கும் காட்டுத்தீயில் தங்கியுள்ளன. பெரிய காட்டுத்தீக்கள் சூழலில் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்குகின்றன.

காட்டுத்தீயைத் தடுப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான உத்திகள் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. பன்னாட்டுக் காட்டுத்தீ மேலாண்மை வல்லுனர்கள் இது குறித்த ஆய்வுகளையும், தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஊக்குவித்து வருகின்றனர்.

காட்டுதீ தொடங்குவதற்கான காரணங்கள் 

காட்டுத்தீ தொடங்குவதற்கான நான்கு முக்கியமான இயற்கைக் காரணங்கள், மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழுவதனால் ஏற்படும் தீப்பொறி, தானாகத் தீப்பற்றுதல் என்பனவாகும் உலகம் முழுவதிலும் எரிந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நிலக்கரிச் சுரங்கத் தீயினாலும் அருகில் உள்ள எரியக்கூடிய பொருட்களைத் தீப்பற்றச் செய்து காட்டுத்தீயை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும், பல காட்டுத்தீக்கள் ஏற்படுவதற்கு மனிதருடைய நடவடிக்கைகள் காரணமாக இருக்கின்றன. தீவைத்தல், அணைக்காமல் எறியப்படும் சிகரெட்டுத் துண்டுகள், கருவிகளில் இருந்து உருவாகும் தீப்பொறி, மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் மின்பொறி என்பன இவ்வாறான காரணங்கள். காய்ந்த மரங்களும் , செடிகளும் அதிக வேகத்தில் உராய்வதனாலும் காட்டுத்தீ பற்றுகிறது.கோடை காலம் மற்றும் அதிக வெய்யில் காலங்களில் காட்டித்தீ அதிகமாக பிடிக்கின்றது.


காட்டுத்தீ ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, வடமேற்குச் சீனா போன்ற இடங்களில் மின்னல் காட்டுத்தீ ஏற்படுவதற்கான முதன்மைக் காரணமாக உள்ளது. உலகின் பிற பகுதிகளில் மனித நடவடிக்கைகள் முக்கியமான காரணங்களான உள்ளன. மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா, பிஜி, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, நிலமீட்புக்கான எரிப்பு, கவனமின்மை போன்ற மனித நடவடிக்கைகளே பெரும்பாலான காட்டுத்தீக்கள் உருவாகக் காரணமாகின்றன.

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...